மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பறின் அறிக்கையின்படி, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க பேச்சாளர் சீன் மெக்கார்மேக் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல லூயிஸ் ஆர்பர் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தமை ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த இரண்டு வருடங்களாக செயற்படாமல் இருக்கின்றமையினால், இந்த காலப்பகுதியில் ஐயாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமை இதன் மூலம் புலப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கப் பேச்சாளர் சீன் மெக்கார்மேக் இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பகம் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.