நடிகர் சங்கத்துக்கு ஜூலை தேர்தல்!!
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 1.6.2015 அன்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில் நடந்தது. பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜய குமார், கே.என். காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர்,
செயற்குழு உறுப்பினர்கள் சார்லி, ரவிகுமார், சின்னி ஜெயந்த், சந்தானபாரதி, சகுந்தலா, கே.ஆர். செல்வராஜ், வீரமணி, ராஜேந்திரன், ‘பசி’சத்யா, குயிலி, ஜெயமணி, கண்டு கல்யாணம், சவுண் டப்பன், ராஜ்குமார், இசையரசன், சித்தன், பிரசாத் வி.சி.ராஜேந்திரன்,
துணை குழு உறுப்பினர்கள் கே.ராஜன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், ராஜ இந்திரபிரவீன், நாமக்கல் ராஜேந்திரன், முகமது மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* 2015–2018–க்கான தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வடபழனி என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள திரைப்பட இசையமைப்பாளர் சங்க அலுவலகத்தில் 15.7.2015 அன்று நடத்துவது என்றும் தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் ஜெ. செல்வராசன், துணை தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* சங்கத்தின் சட்டம் விதிப்பது தேர்தல் சம்பந்தமான அறிவிக்கையை பொதுச் செயலாளர் ராதாரவி, சங்க உறுப்பினர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைப்பார். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating