யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதி பிரதம நீதியரசரால் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதியினை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கமலத், நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பி.டபள்யூ.டி.சி. ஜெயதிலக உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். சட்டம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், உட்கட்டுமான அபிவிருத்தி நிகழ்சி பிரிவின் ஒரு கட்டமாக இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நீதிமன்ற தொகுதி உருவாக்கத்துக்கு உலக வங்கி அனுசரணை வழங்கியுள்ளது. இப்புதிய நீதிமன்றத் தொகுதியில், பிரத்தியேக அலுவலகங்கள், ஆவணக்காப்பக அறைகள் உட்பட பல்வேறு பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. மூன்று மாடிகளைக் கொண்ட இத்தொகுதி யாழ்ப்பாண நூலகத்துக்கு முன்பாக அமையப் பெற்றுள்ளது. இதன் கட்டுமானத்துக்காக 170 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.