வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!
நாயா அலைஞ்ச நாலு காசு சம்பாரிக்கிற நேரத்திலே பேயா வந்து பிரச்சனையை கொடுக்குது ஒரு நாயி….’ இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் அவ்வப்போது திரையில் தோன்றி காமெடி செய்வது கண்ணனின் ஹாபி. அவர் காமெடியாக இதை செய்தாரா? அல்லது சீரியஸாக செய்தாரா?அவருக்கே வெளிச்சம்! ஆனால், பிரச்சனை முத்தலாகிவிட்டது. மதுரவாயலில் குடியிருக்கும் கனல் கண்ணன் ஒரு தெருநாயை சுட்டுக் கொன்று விட்டார். அதே பகுதியில் வசிக்கும் தெருநாய்களுக்கு தினமும் ஜீவகாருண்யம் காட்டி வரும் பிரியதர்ஷினி என்ற பெண், சுட்டது கனல் கண்ணன்தான் என்கிறார் தன் புகாரில்! நாயா? நானா? சுட்டேனா? ஏன் சார் கேவலப்படுத்திறீங்க? என் ரேஞ்சுக்கு ஒரு சிங்கத்தையோ, புலியையோ சுட்டேன்னாதானே பெருமை? அந்த பொண்ணு சொல்ற நாளில், நான் சென்னையிலேயே இல்லை என்கிறார் கனல் கண்ணன்.
லோக்கல் ஸ்டேஷனில் புகாரை வாங்கிக் கொண்டவர்கள், எந்த செக்ஷனில் கேஸ் போடுறதுன்னு தெரியலையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் பிரியதர்ஷினி. இந்த விஷயத்திற்காக தன் அண்ணனை கனல் கண்ணன் மிரட்டுவதாக அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
நாயின் உடலை கைப்பற்றிய கால்நடை துயர் தடுப்பு பிரிவினர் போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். ரிப்போர்ட்டில், நாயின் உடலில் குண்டு இருந்து, அதுவும் கனல் கண்ணனின் துப்பாக்கி குண்டாக இருந்தால், குண்டுகட்டாக அவர் தூக்கிக் செல்லப்படுவாராம்.
வடக்கே ஒரு மான் வழக்கு! தெற்கே இந்த நாய் வழக்கா?