புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!
புதுக்கோட்டை அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப செட்டியார். இவரது மனைவி மீனாள் ஆச்சி (வயது 74). இவர்களது மகன் ராமநாதன். இவர் தற்போது சென்னையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கிருஷ்ணப்ப செட்டியார் மறைவுக்கு பிறகு மீனாள் ஆச்சி மட்டும் பனையப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்ற மீனாள் ஆச்சி பால் வாங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமலும், வாசல் தெளிக்காமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு முன்பு நின்று அழைத்தனர். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை.
இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது அங்கு மீனாள் ஆச்சி பிணமாக கிடந்ததை கண்டனர். உடனடியாக இதுபற்றி பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது அங்கு மீனாள் ஆச்சி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக மீனாள் ஆச்சி கழுத்தில் 7 பவுன் செயினும், கைகளில் 7 பவுன் அளவுக்கு 4 வளையல்களும் அணிந்து இருந்துள்ளார். அந்த நகைகள் கொள்ளை போயிருந்தது. எனவே அவர் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.
பீரோவில் இருந்து வேறு ஏதாவது நகை, பணம் கொள்ளை போயிருக்கலாமா? என்று விசாரித்து வரும் போலீசார் இதுபற்றி அவரது மகன் ராமநாதனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating