ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மரியஜோசப் (வயது80). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் (40) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. ராஜ், ஜேசுராஜ் வெளியூரில் வசித்து வருகின்றனர். அல்போன்ஸ் தந்தையுடன் வசித்து வருகிறார். மரியஜோசப்புக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கடந்த சில மாதங்களாக அல்போன்ஸ் கூறி வந்தார்.
இதனால் தந்தை–மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அல்போன்ஸ் உருட்டு கட்டையால் மரியஜோசப்பை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து வந்து மரியஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அல்போன்சை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating