விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்
அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே, விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப் படைத் தளப் பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றது தெரியவந்ததாக, விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த இரு நாட்களில் விமானப்படைத்தளத்தைச் சுற்றியுள்ள பத்து வீடுகளில் தங்கியிருப்போரை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்காக விடுதலைப்புலிகள் எவ்வாறு முகாமினுள் நுழைந்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் அநுராதபுரம் பகுதியில் மோட்டார் காரோட்டப் போட்டி நடைபெற்றதாகவும் அதில் சுமார் ஒரு இலட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்களோடு சேர்ந்து கரும்புலிகளும் அந்தப் பிரதேசத்தினுள் நுழைந்திருக்கலாமெனக் கூறப்படுவது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணத்திலும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இதேநேரம், விமானப்படைத்தளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக இராணுவத்தினரும் விமானப்படையினரும் முகாமில் நிறுத்தப்பட்டுள்ளனர். முகாமின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தத் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரில் 8 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.