கும்பகோணம் அருகே மேலதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரை தின்று செவிலியர் தற்கொலை முயற்சி!!
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மணல் மேட்டுதெருவை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி மணிமேகலை (வயது 37). இவருக்கு ஒரு மகள், 5 மகன்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மணிமேகலை திருநாகேஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அங்கு மேலதிகாரியாக இருப்பவர் பகுதி சுகாதார செவிலியர் சாந்தி. கடந்த 2–ந்தேதி முருக்கங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சக பணியாளர்கள் மத்தியில் மேலதிகாரி சாந்தி மணிமேகலையை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மணிமேகலை வீட்டிற்கு சென்று தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மயக்கம் தெளிந்தது.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நான் திருநாகேஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு மேலதிகாரியாக பகுதி சுகாதார செவிலியராக சாந்தி பணியாற்றி வருகிறார். கடந்த 2–ம் தேதி முருக்கங்குடியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நரசிங்கன்பேட்டை, திருநீலக்குடி, வேப்பத்தூர், திருநாகேஸ்வரம், முருக்கங்குடி ஆகிய ஊர்களில் பணியாற்றும் 70 ஆரம்ப சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டோம்.
அப்போது தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கடந்த மாதம் 25–ந்தேதி பகுதி சுகாதார செவிலியர் சாந்தி உங்களோடு பணியாற்றியதாக அறிக்கை கொடுத்துள்ளார். நீங்கள் அவரோடு பணியாற்றினீர்களா என கேட்டார். அதற்கு நான் மட்டும் அன்று திருநாகேஸ்வரம் பால்வாடியில் பணியாற்றினேன். சாந்தி என்னோடு வரவில்லை என கூறினேன்.
ஆய்வு கூட்டம் முடிந்த பின் சாந்தி என்னிடம் வந்து என்னை மேலதிகாரியிடமா காட்டி கொடுக்கிறாய். இனிமேல் நான் உன்னுடைய அறிக்கைகளுக்கு எந்த கையெழுத்தும் போடமாட்டேன் என சக பணியாளர்கள் மத்தியில் கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த நான் வீட்டுக்கு வந்து தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலதிகாரி திட்டியதால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating