பாகிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்
பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து அந்நாட்டு அரசுக்கும், பெனாசிரின் கட்சிக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வசித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, அண்மையில் நாடு திரும்பினார். முன்னதாக பெனாசிருக்கும், முஷாரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மீண்டும் ஜனாதிபதியாக முஷாரப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவளிக்க முடிவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இராணுவ உடையில் முஷாரப் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க கூடாது என்று பெனாசிர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், இதுதொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தும் முடிவுகள் ஏதும் அறிவிக்கப்படாமல் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக பொதுத் தேர்தலை வரும் ஜனவரிக்கு பிறகு நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக தற்போதுள்ள பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகச் செய்து பின்னர் இடைக்கால அரசை அமைக்கும் யோசனையும் உருவாகியுள்ளது.
இதற்காக பெனாசிருடன் பேச்சு நடத்த முஷாரப்பின் சார்பில் அவரது நம்பிக்கைக்கு உரியவரும் ,அந்நாட்டு பாதுகாப்புக் குழுவின் செயலருமான தாரிக் அஜீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு அமைக்கப்பட உள்ள இடைக்கால அரசின் தலைவராக தேர்ந்தெடுக்க கீழ்கண்டவர்களில் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யாகூப் அலிகான், முன்னாள் பிரதமர் குலாம் முஸ்தபா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் இஸ்ரத் ஹுசேன், இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி அப்துல் வாஹீத் மற்றும் பெனாசிரின் சார்பில் அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மக்தூம் அமின் பாஹீம் ஆகியோரில் ஒருவரை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
தீர்ப்புக்குப் பிறகு…உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் நிலையில் உள்ளது. இதில், முஷாரப்புக்கு சாதகமாக வருமா அல்லது பாதகமாக வருமா என்பது தெரியவில்லை. அதனால், இடைக்கால அரசு அமைக்கும் பேச்சுவார்த்தையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிறகு தொடரலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக முஷாரப்பின் பிரதிநிதியான தாரிக் அஜீஸ்,பெனாசிரிடமும், அவரது கட்சி நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.