எமர்ஜென்சி லைட்டுகளில் மறைத்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: கேரள விமான நிலையத்தில் சிக்கியது!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையின்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான சுங்கத்துறை அதிகாரிகள், துபாய்-தோகா கத்தார் ஏர்வேஸ் விமானம் இன்று காலை கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அதில் வந்த பயணிகளின் உடமைகளை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
அப்போது, கன்னூர் மாவட்டம் கதிரூரைச் சேர்ந்த முகமது ஷாகிர் (வயது 39) என்ற பயணி எமர்ஜென்சி விளக்குகளில் பேட்டரிகள் இருக்கும் இடத்தில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த சுங்க புலனாய்வு அதிகாரிகள், அவரிடம் இருந்து 28 தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். 3.26 கிலோ எடைகொண்ட அந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.90 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating