நத்தம் அருகே கனரா வங்கிக்குள் புகுந்த கொள்ளையர் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை மெயின் ரோட்டில் கனரா வங்கி உள்ளது. நேற்று மதியம் பணி முடிந்ததும் வங்கி கதவு பூட்டப்பட்டது.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கழிவறையின் மேல் பகுதியில் உள்ள வெண்டிலேட்டரை உடைத்தனர். அதன் பின்னர் கழிவறையின் கதவை ஸ்குரு டிரைவரால் நெம்பி வங்கிக்குள் புகுந்தனர். அங்குள்ள காமிராவை மர்ம நபர்கள் செயல் இழக்கச் செய்தனர்.
அதனைத் தொடந்து வங்கியில் வைக்கப்பட்டுள்ள அலாரத்தை செயல் இழக்கச் செய்த போது அது பயங்கர சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. நீண்ட நேரம் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த கொள்ளைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இது குறித்து வங்கி காவலாளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த நத்தம் போலீசார் வங்கிக்கு விரைந்தனர். வங்கியை திறந்து பார்த்த போது கழிப்பறையின் கதவு திறந்து கிடந்தது. அதோடு வெண்டிலேட்டரும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வங்கியில் உள்ள பணத்தை பார்த்தபோது அது எதுவும் திருட்டு போகவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் கையுறை மற்றும் ஷூ அணிந்துதான் வந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating