கின்னஸ் சாதனை படைத்த பஞ்சாப் சிங்கம்: 5 மாதத்தில் 16219 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம்!!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான 31 வயது குர்ஜித் சிங், பெண் குழந்தைகளை காப்பது – கல்வி கற்க வைப்பது பற்றி நாட்டு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டார்.
இதற்காக என்ன செய்யலாம் என்று யோசனை செய்த அவர், நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் எராண்டே என்பவர் 14576 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் விவரம் அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது கின்னஸ் சாதனையை முறியடிக்க திட்டமிட்ட அவர், பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றிய தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குறித்து கின்னஸ் நிர்வாகத்திடம் விண்ணப்பம் மூலம் முறைப்படி தெரிவித்தார்.
அதன் பின் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தனது சொந்த ஊரான பாட்டியாலாவிலிருந்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய அவர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் சைக்கிளில் பயணம் செய்து தனது கருத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பயணத்தில் பிரசாந்தின் சாதனையை முறியடித்த குர்ஜித் சிங், சரியாக 16219 கி.மீ. தூரத்தை கடந்து நேற்று பாட்டியாலா நகரை வந்தடைந்தார். அப்போது குர்ஜித்தின் நண்பர்கள் மற்றும் பாட்டியாலா நகர பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தனது பயணத்தை நிறைவு செய்த பின் குர்ஜித் சிங் பேசுகையில், என்னுடைய வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. எனது கனவு இன்று நனவாகியுள்ளது. கின்னஸ் சாதனை படைத்தது மகிழ்ச்சி என்றாலும், பெண்களை பாதுகாப்போம் என்று பிரச்சாரம் மேற்கொண்டது மன நிறைவை அளிக்கிறது என்றார்.
நாடு முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தபோதிலும், வானிலை மாற்றம் காரணமாக மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு- காஷ்மீர் மாநிங்களுக்கு குர்ஜித்தால் செல்ல இயலாமல் போனது மட்டும் அவருக்கு சற்று சங்கடத்தை அளித்துள்ளது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியதுடன், கின்னஸ் சாதனையையும் படைத்த பஞ்சாப் சிங்கத்துக்கு நாமும் வாழ்த்து சொல்லலாமே…
Average Rating