மூளைச்சாவு அடைந்த புதுவை மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!!
புதுவை பாக்கமுடையான் பட்டுமுல்லை நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 45). இவர் கடலூரில் உள்ள வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சாந்தினி (15). இவர் புதுவை கோரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து தேர்ச்சி பெற்று பிளஸ்–1 வகுப்புக்கு விண்ணபித்து இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டின் மாடியில் காயவைத்திருந்த துணிகளை சாந்தினி எடுத்துவர சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து சாந்தினி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாந்தினி உடனடியாக சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சாந்தினி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து தனது மகள் இறந்தாலும் அவரது உடல் உறுப்புகள் பலருக்கு பயன்படட்டுமே என்ற உயர்ந்த நோக்கில் சாந்தினியின் முக்கிய உடல் உறுப்புகளான இதயம், கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கே சாந்தினியின் பெற்றோர் அளித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்ய சொந்த ஊரான கோவை மாவட்டம் அவினாசிக்கு சோகத்துடன் எடுத்து சென்றனர்.
Average Rating