திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆணைக்கட்டி கணபதி தெருவை சேர்ந்தவர் கே.கே.ஏகாம்பரம். இவரது மகன் ஜானகிராமன் (வயது 34). விசைத்தறி உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர் மற்றும் பெரியோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று காலை குடியாத்தத்தை அடுத்த சித்தூர் ரோடு பாக்கம் கிராமம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது. இதற்காக உறவினர்களும், நண்பர்களும் மற்றும் தெரிந்தவர்களும் மணமக்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மணமகன் ஜானகிராமன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் காத்திருந்த மணப்பெண் வீட்டர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டில் விசாரித்தபோது, மணமகனை காணவில்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து மணமகள் வீட்டினர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் மணமகன் வீட்டாரிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, மணமகன் ஜானகிராமன், அவரது பெற்றோர் ஏகாம்பரம் (75), முனியம்மா (65) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஏகாம்பரத்தையும், அவரது மனைவி முனியம்மாவையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating