பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது
வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும் இதைக் கண்டு மகிழ்ந்தனர். சென்னையில், மழை பெய்தபோதும் கூட மக்களால் நெருங்கி வந்த நிலவை ரசிக்க முடிந்தது. இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள் கூறுகையில், வழக்காக குறிப்பிட்ட நேரத்தில் பூமிக்கு அருகில் நிலா வரும்போது அது பிறை வடிவில் இருக்கும். ஆனால் பெளர்ணமி தினத்தன்று நெருங்கி வருவது என்பது மிகவும் அரிய நிகழ்வாகும். நிலா பூமியை சுற்றி வரும்போது சில நேரங்களில் பூமியிலிருந்து தோராயமாக 3 லட்சத்து 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். சில நேரங்களில் 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு விலகிச் செல்லும். இது அடிக்கடி மாறக் கூடிய ஒன்று என்றார் அய்யம்பெருமாள். நிலா இன்னும் பெரிதாக தெரியவுள்ளதாக வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.