சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது!
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். திருச்சி அருகே உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு நேற்று முன்தினம் திடீரென மதம் பிடித்தது. கட்டியிலிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கும் இங்கும் மூர்க்கமாக நடக்க ஆரம்பித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பெண் யானை ஒன்று வரவழைக்கப்பட்டு மாரியப்பன் பக்கம் அனுப்பப்பட்டது. பெண் யானையைப் பார்த்ததும் மாரியப்பன் சற்றே சாந்தம் அடைந்தது. இருப்பினும் அதன் மதம் குறையவில்லை. இதையடுத்து கால் நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் யானைக்கு செலுத்தினர். இதையடுத்து யானை மயக்கமடைந்தது. பின்னர் யானை சகஜ நிலைக்குத் திரும்பியது. இருப்பினும் பாதுகாப்புக்காக பெண் யானை தொடர்ந்து மாரியப்பன் அருகிலேயே இருக்க வைக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் சகஜ நிலை திரும்பியது.
இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி அசோக் கூறுகையில், ஏற்கனவே இந்த யானைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும் மதம் பிடித்தது. கடந்த செப்டம்பர் மாதமும் மாரியப்பனுக்கு மதம் பிடித்தது. இதையடுத்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது யானை சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. அதற்குப் போட்டிருந்த இரும்புச் சங்கிலி மாற்றப்பட்டு புதிய வலுவான சங்கிலி போடப்பட்டுள்ளது என்றார் அசோக். மதம் பிடித்து சகஜ நிலைக்குத் திரும்பிய மாரியப்பனுக்கு வயது 19 ஆகிறது.