திருமங்கலம் அருகே இன்று தண்டவாளத்தில் தலைவைத்து 2 மாணவர்கள் தற்கொலை!!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சங்கர்பாண்டி (வயது14). இவர் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
சங்கர்பாண்டி படிக்கும் வகுப்பிலேயே தொட்டியபட்டியை சேர்ந்த இருளாண்டி–பாண்டியம்மாள் தம்பதியரின் மகன் சஞ்சய் கண்ணன் (14) என்பவரும் படித்து வந்தார். 2 பேரும் நெருங்கிய நண்பர்கள்.
9–ம் வகுப்பு இறுதி தேர்வில் சங்கர்பாண்டி, சஞ்சய் கண்ணன் ஆகிய 2 பேரும் தோல்வி அடைந்தார்கள். இதனால் இவர்களால் 10–ம் வகுப்புக்கு செல்ல முடியவில்லை. 9–ம் வகுப்பு பெயிலானதால் 2 பேரும் மனவேதனையுடன் காணப்பட்டனர்.
தன்னுடன் படித்த சக மாணவர்கள் 10–ம் வகுப்பு சென்ற நிலையில் தாங்கள் மட்டும் 9–ம் வகுப்பிலேயே இருந்தது 2 பேரையும் கவலை அடைய செய்தது.
இந்நிலையில் நேற்று காலை சஞ்சய் கண்ணன் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதேபோல் சங்கர் பாண்டியும் டியூசன் செல்வதாக கூறி வெளியே சென்றார். பின்னர் 2 பேரும் வீடு திரும்பவில்லை.
நேற்று மாலை சந்தித்து கொண்ட இவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன் படி இன்று அதிகாலை 2 பேரும் திருமங்கலத்தை அடுத்துள்ள கரிசல்பட்டி பகுதியில் உள்ள தண்டவாள பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது. உடனே 2 பேரும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொண்டனர். அதிவேகத்தில் வந்த ரெயில் அவர்கள் மீது ஏறிச்சென்றது. இதில் சங்கர் பாண்டி, சஞ்சய் கண்ணன் ஆகிய 2 பேரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை 7 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் முண்டமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
Average Rating