மருத்துவரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் மிகா சிங் டெல்லியில் கைது!!
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விழா ஒன்றில் மருத்துவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த வழக்கில் பாடகர் மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஆப்தல்மலாஜிக்கல் சொசைட்டி ஒன்று டெல்லி இந்தர்பூரியில் உள்ள பூசா இன்ஸ்டிடியூட் மைதானத்தில் 3 நாள் மாநாட்டை நடத்தியது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் பாடகர் மிகா சிங், மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியின்போது, அனைத்து ஆண்களும் ஒருபுறமும், பெண்கள் அனைவரும் மறுபுறமும் வருமாறு கூறினார்.
ஆனால், இதில் டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவர், மிகா சிங் கூறியபடி செய்யாமல் பெண்களின் பகுதிக்கு சென்றார். இதனால் டாக்டர் ஸ்ரீகாந்த்தை மேடைக்கு அழைத்த மிகா, மேடையில் வைத்தே அவரை பளார் என அறைந்தார். இதனால் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து டாக்டர் ஸ்ரீகாந்த் போலீசில் புகார் செய்தார். பாடகருக்கு எதிராக போலீசார் குற்றவழக்கு பதிவு செய்தனர். மிகா சிங் டாக்டரை அறைந்த வீடியோ ஒன்று பார்வையாளர்களில் ஒருவரால் எடுக்கப்பட்டு யூ-டியூபில் அப்லோடு செய்யபட்டது.
மிகாசிங் அறைந்ததால் டாக்டருக்கு செவிப்பறையில் சிறிய துளை ஏற்பட்டதென்றால் அவர் எவ்வாறு அறைந்து உள்ளார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம் என டாக்டர் ராஜேஷ் சின்கா கூறி உள்ளார். அந்த மருத்துவர் குடித்துவிட்டு மோசமாக நடந்து கொண்டதால்தான் அடித்தேன் என்று மிகா சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி போலீசார் இன்று மிகா சிங்கைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலமணி நேரத்திற்குள்ளாவே அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Average Rating