ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிறுத்தையை துன்புறுத்திய காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர் கைது!!
ஐதராபாத் உயிரியல், பூங்காவில் சிறுத்தையை பிடித்து இழுத்து துன்புறுத்திய காட்சியை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பகதூர்புரா பகுதியில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில், ஆமையின் மீது ஏறி நின்றவாறு எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் ‘பேஸ்புக்’கில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது அங்கு மீண்டும் நடந்து உள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த அரீப் தாஹா மேதி (வயது 26) என்ற வாலிபர் நேரு உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க சென்று இருந்தார். அப்போது அங்குள்ள சிறுத்தை ஒன்றின் பக்கத்தில் நின்று அவர் புகைப்படம் எடுக்க விரும்பினார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்குள்ள ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து, சிறுத்தை இருக்கும் தடுப்பு பகுதிக்குள் சென்றார். சிறுத்தையை துன்புறுத்தி உள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டார். நிறைய பேர் அதை பார்த்தனர். அவரது படம் அதிகம் பகிரப்பட்ட நிலையில், அதைப் பார்த்த நேரு உயிரியல் பூங்கா ஊழியர் மொய்னுதீன், இதுகுறித்து பகதூர்புரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, அரீப் தாஹா மேதியின் ‘பேஸ்புக்’ பக்கத்தை கண்காணித்த போலீசார், பின்னர் அவரை கைது செய்தனர். உயிரியல் பூங்காவில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது; விலங்கை சீண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விசாரணையின் போது, “டிஸ்கவரி சேனலின் தீவிர ரசிகனான நான், ஆர்வத்தில் விலங்குகளுடன் நெருக்கமாக பழக முயற்சி செய்வேன். அப்படித்தான் சிறுத்தையிடமும் சென்றேன். அப்போது எடுத்த படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டால் அதிக விருப்பங்களை பெறலாம் என்ற எண்ணத்தில் அப்படி பகிர்ந்து கொண்டேன்” என்று அரீப் தாஹா மேதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறுத்தையின் அருகே அரீப் தாஹா மேதியை அனுமதித்ததாக, கோவிந்த் என்ற உதவி வனவிலங்கு பராமரிப்பாளரை உயிரியல் பூங்கா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Average Rating