நெல்லை மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: காதல் தோல்வி காரணமா? – போலீசார் விசாரணை!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் இளவரசன். இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்தமகன் ஜீவா (வயது 23), தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக உள்ளார். இளையமகள் கண்மணி (20). இவர் நெல்லை மருத்துவ கல்லூரியில் 3–ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்காக பாளை ஜெயா நகரில் உள்ள வாடகை வீட்டில் கண்மணியும் அவரது தாய் லட்சுமியும் தங்கி இருந்தனர்.
நேற்று லட்சுமி தூத்துக்குடி விடுதியில் தங்கி இருந்த மகன் ஜீவாவை பார்க்க சென்றார். இரவு 9 மணி அளவில் பஸ் மூலம் நெல்லைக்கு வந்த போது லட்சுமியின் செல்போனுக்கு அவரது மகள் கண்மணி போன் செய்தார். ஆனால் செல்போன் கைபையில் இருந்ததால் அவர் எடுக்கவில்லை.
10 மணி அளவில் லட்சுமி வீட்டுக்கு வந்த போது அங்கு கண்மணி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த லட்சுமி கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து கண்மணியின் உடலை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். சம்பவ இடத்துக்கு ஐகிரவுண்டு இன்ஸ்பெக்டர் பொறுப்பு அரிகரன், சப்–இன்ஸ்பெக்டர் தெய்வானை மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
தூக்குபோட்டு தற்கொலை செய்த மாணவி கண்மணி ஏற்கனவே காதல் பிரச்சினை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிக்கும் போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சக மாணவிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயிரை காப்பாற்றி உள்ளனர்.
இதனால் பண்ருட்டியில் இருந்த அவரது தாய்லட்சுமி, பாளையில் தனிவீடு வாடகைக்கு எடுத்து கண்மணியை தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இந்த பிரச்சினை காரணமாக கண்மணியுடன் படிக்கும் சக மாணவ–மாணவிகள் அவருடன் சகஜமாக பேசி பழகுவதில்லையாம்.
கண்மணியும் யாரிடமும் சரியாக பேச மாட்டாராம். இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த கண்மணி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating