போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மனைவி–குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்!!
செங்குன்றம் அருகே உள்ள காரனோடையை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 35). இவரது மனைவி பாத்திமா (32). இவர்களுக்கு பாசின் (11), கலீல்ரகுமான் (9), காதர் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இஸ்மாயில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இஸ்மாயிலுக்கும், மண்ணடியில் உள்ள அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக இஸ்மாயில் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த இஸ்மாயில் ஒரு கேன் நிறைய மண்எண்ணெய் எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் இன்று காலை 9.20 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
திடீரென்று மண்எண்ணெயை மனைவி, குழந்தைகள் மற்றும் தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று அவர்கள் 5 பேரையும் மீட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர்.
இந்த மாதிரி மண்எண்ணெய் கேனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நீதி கேட்டு வருவது வழக்கமாகி விட்டது. சராசரியாக மாதம் ஒரு சம்பவமாவது நடக்கிறது.
Average Rating