கருவில் வளரும் குழந்தைகளின் பாலின சோதனை முடிவை அறிவித்தவர் கைது!!
அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் இயங்கிவரும் பாட்டியா ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் எடுக்க வரும் பெண்களின் வயிற்றில் வளரும் கரு ஆணா?, பெண்ணா? என்ற முடிவுகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு தெரிவிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
ஏற்கனவே, அரியானாவில் ஆண்-பெண் பிறப்பு விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவிவரும் நிலையில், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த குர்கான் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஸ்கேன் மையத்தின் உரிமையாளரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து, பாட்டியா ஸ்கேன் பரிசோதனை மையத்துக்கு இன்று ஒரு கர்ப்பிணி பெண்ணை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தனது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக அந்த மையத்தின் உரிமையாளரிடம் அந்தப் பெண் கூறினார்.
பத்தாயிரம் ரூபாய் தந்தால் நீங்கள் விரும்புவது நடக்கும் என்று அந்த மையத்தின் உரிமையாளரான ராஜிவ் பாட்டியா (52) கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதிக்க, பணத்தை பெற்றுகொண்டு ஸ்கேன் எடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் ராஜிவ் பாட்டியாவை கையும், களவுமாக கைது செய்தனர்.
கடந்த 2001-ம் ஆண்டு இதேபோன்ற குற்றச்சாட்டில் கைதான ராஜிவ் பாட்டியாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ள இவர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதே குற்றச்சாட்டில் கைதாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Average Rating