ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:–
18 வயது பூர்த்தியடையாமல் பெண் குழந்தைக்கு திருமணம் நடத்தினால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகள் வரக்கூடும் என்றும், அதையும் மீறி அத்திருமணத்தை நடத்தினால் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006–ன் கீழ் தண்டிக்கப்படுவர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள திருமண மஹாலில் கடந்த 8–ந் தேதி அன்று வேந்தோணி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகள் விஜயமாலா என்ற பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாக திருமணம் நடைபெறவிருந்த தகவல் கிடைத்ததும் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் தலைமையில், பரமக்குடி அனைத்துமகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சைல்டுலைன், கிராம நிர்வாகஅலுவலர் ஆகியோர் நேரடியாக சென்று பெற்றோர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக்கூறி திருமணம் நிறுத்தப்பட்டது.
அந்த பெண் குழந்தையைத் தொடர்ந்து படிக்க வைத்தால் சமூக நலத்துறையின் மூலம் மாதம்தோறும் படிப்புச் செலவிற்காக ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் முடித்தால் துறையின் மூலம் திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்படும் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு பெண் குழந்தைகளின் நலவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, திருமண நிதியுதவி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
திருமணத்திற்கு பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்தும் பெற்றோர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Average Rating