கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி கைதி தப்பி ஓட்டம்!!
ராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.
கடந்த 10–ந்தேதி வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த சுரேஷ் மற்றும் வேறொரு வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸ்காரர்கள் லாரன்ஸ் உள்பட 2 பேர் அழைத்து சென்றனர்.
அப்போது, குற்றவாளிகள் 5 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை புழல் ஜெயிலில் அடைப்பதற்காக சென்னைக்கு பஸ்சில் அழைத்து வந்தனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் சுரேஷ் தெரிவித்தார். அவரை 1–வது நடைமேடையில் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்து விட்டு மற்ற 4 கைதிகளுடன் போலீஸ்காரர்கள் 2 பேரும் வெளியே காத்து இருந்தனர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த சுரேஷ், திடீரென போலீஸ்காரர்கள் லாரன்ஸ் உள்பட 2 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் லாரன்ஸ் அவரை பிடிக்க விரட்டினார். இதில் தடுமாறி விழுந்ததில் லாரன்சின் வலது கால் முறிந்தது. இதற்குள் கைதி சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்.
இச்சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைதி தப்பி ஓடியது குறித்து அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மற்ற 4 கைதிகளையும் பத்திரமாக புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். காலில் பலத்த காயம் அடைந்த லாரன்சுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தப்பி ஓடிய சுரேஷ் கோர்ட்டில் ஆஜர் ஆன போது வக்கீல் மூலம் ஜாமீன் பெற முயன்று உள்ளார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating