வைகை அணையில் குதித்து மதுரை என்ஜினீயர் தற்கொலை!!
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன். இவரது மகன் அசின்குமார் (வயது 21). சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து முடித்தார்.
கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த நிலையில் அசின்குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை வெளியே செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணைக்கு சென்றார்.
அங்கிருந்தபடியே தனது செல்போன் மூலம் ‘‘என்னை யாரும் தேட வேண்டாம் நான் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று தந்தைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இதை பார்த்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் உடனடியாக வைகை அணைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு அசின் குமாரை தேடியபோது அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் இருந்தது. அவரை காணவில்லை.
இதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வைகை அணையில் இறங்கி தேடினார்கள். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை நிறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை, அசின்குமாரின் உடல் வைகை அணையில் மிதப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசின்குமார் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? வேலை கிடைக்காத விரக்திதான் காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating