ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி சாவு- 3 பேர் படுகாயம்!!
ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிக்கூட மாணவி பலியானார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
மேல்விஷாரம்– கத்தியவாடி ரோட்டில் டி.எம்.காலனி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தை சுற்றிலும் சுமார் 20 அடி உயரம், 100 நீளத்துக்கு மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் உள்ளது. அந்த சுற்றுச்சுவரையொட்டி 18 குடிசை வீடுகள் உள்ளன. அதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த வீடுகளில் வசிப்போர் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவரில் தண்ணீர் ஊறி, ஓதம் ஏற்பட்டு இருந்தது. அதனை அவர்கள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனியார் நிறுவன சுற்றுச்சுவர் சுமார் 50 அடி நீளத்துக்கு திடீரென இடிந்து 5 குடிசை வீடுகளின் மீது விழுந்தது. அதில் அடைக்கலம் (வயது 48), ராணி (35), அவரது மகள் சுகுணா (15) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
அதில் சுகுணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுகுணா கீழ்விஷாரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து இடிந்து விழுந்த சுவருக்கு கீழே யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating