போலி வக்கீல் பட்டம்: தோமரின் போலீஸ் காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு!!
வக்கீலுக்கு படிக்காமல் போலியாக வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்திர சிங் தோமரின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை கைது செய்து கடந்த 9-ம் தேதி மாலை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜிதேந்தர் சிங் டோமரை நான்கு நாள் விசாரணை காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த கெடு இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தோமர் வைத்திருந்த அத்தனை ஆவணங்களும் போலியாக உள்ளதால் அவரிடமும், அவருக்கு இந்த ஆவணங்களை தயாரித்து அளித்த பிறரிடமும் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, தோமரின் விசாரணை காவலை மேலும் 11 நாள் நீட்டிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
கடந்த முறை அளிக்கப்பட்ட 4 நாள் விசாரணை காவலில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்கே சுமார் 45 மணி நேரம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணை காவலை நீட்டிப்பதற்கு மறுப்பு தெரிவித்த தோமரின் வழக்கறிஞர், இவ்வழக்கில் தேவையான ஆதாரங்களை எல்லாம் ஏற்கனவே போலீசார் திரட்டி விட்டனர். தோமருக்கு உடல்நிலை சரியில்லை. சிலரது தூண்டுதலின்பேரில் அவரை துன்புறுத்தவே காவலை நீட்டிக்க வேண்டும் என்று போலீசார் கேட்கின்றனர் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி பூஜா அகர்வால், தோமரின் விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
Average Rating