ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார்: துப்புரவு தொழிலாளர்களை சந்தித்தபின் ராகுல் பேட்டி!!
டெல்லியில் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்த பின் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார் என்று’’ கூறினார்.
தலைநகர் டெல்லியின் கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு மிக குறைந்த அளவே வருவாய் இருப்பதால், அந்த மாநகராட்சி கடந்த 2012–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே கடும் நிதி பற்றாக்குறையில் தவித்து வருகிறது. இதனால் துப்பரவுப் பணியாளர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று கிழக்கு டெல்லி மாநகராட்சி அலுவலகம் எதிரே துப்புரவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் துப்புரவு தொழிலாளர்களுக்கு மட்டுமே பேசவில்லை. எப்போதெல்லாம் ஏழை மக்கள் நசுக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் நான் அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.
ஒரு நாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஒரு வருடம் அல்ல. எனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காக அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி பாதிக்கப்படும் ஏழை மக்களை சந்தித்து ஆறுதல் கூறு வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating