ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட பல்லி பர்கர்: பயணி அதிர்ச்சி!!
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட பர்கரில் உயிருடன் பல்லி கிடந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ‘ஏஐ 111’ விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதில் பயணித்த ஒருவர் உணவு கேட்ட போது உணவு தட்டில் இருந்த பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட பர்கரின் அருகில் ஒரு பல்லி உயிரோடு இருந்துள்ளது. உணவு தட்டில் பல்லி கிடந்ததை பார்த்த அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘அய்யா சாமி, ஆளை விடு. இந்த உணவே எனக்கு வேண்டாம்’ என்று அவர் கூறியுள்ளார். புதிதாக வேறு உணவு கொண்டு வருவதாக அவரிடம் கூறியதற்கு, எனக்கு எதுவுமே வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்த விமாணத்தில் பயணித்த வேறு சிலரும் சாப்பிட மறுத்து விட்டதாகவும் தெரிகின்றது.
இது குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்திடம் அந்த பயணி புகார் கூறியதாகவும், இது தொடர்பாக நிர்வாகத்திடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், கடந்த வியாழக்கிழமை டெல்லி-லண்டன் விமானத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது.
Average Rating