6 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வண்டியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் 17 வயது மகளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது30) என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பாலகோம்பையை சேர்ந்த ராமசாமியின் 17 வயது மகளுக்கும், வண்டியூரை சேர்ந்த காரியராஜ் (27) என்பவருக்கும் மாவூத்து வேலப்பர் கோவிலில் திருணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு நல ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ், உறுப்பினர்கள் மெர்லின், ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இரு வீட்டாரின் பெற்றோர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதுடன் வரும் 16–ந் தேதி குழந்தைகள் நல அலுவலர் முன்பு இரு வீட்டாரும் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
தேனி துரைராஜபுரம் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சுப்பிரமணி என்பவருக்கும் நேற்று காலை நடக்க இருந்த திருமணத்தை குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் முனீஸ்வரன், சந்திரா ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கம்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் நடக்க இருந்த திருமணம் குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயராணி ஆகியோர் தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை குழந்தைகள் நல பாதுகாப்பு குழு முன்பாக ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரை சேர்ந்தவர் ராமன். இவரது 28 வயது மகனுக்கும் உறவுக்கார பெண்ணுக்கும் ராமேஸ்வரம் கோவிலில் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
கோவிலில் உள்ள அலுவலகத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணுக்கு திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கான பதிவு ஏற்பாடு நடந்தது. அப்போது பெண்ணுக்கு வயது 17 என்பது தெரியவந்தது.
இதை அறிந்த ராமநாதபுரம் ‘‘சைல்டு லைன்’’ ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் கோவிலில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதவல்லி ஆகியோர் திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமக்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் ரெகுநாதபுரம் மேலவலசையை சேர்ந்த 34 வயதுள்ள ஒருவருக்கும் 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது.
Average Rating