குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு!!
மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்தவர் பெண் வக்கீல் ஜான்வி (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் செம்பூர் ஆர்.சி.எப். பகுதியில் உள்ள கிழக்கு தனி வழிச்சாலையில் விதிமுறையை மீறி தவறான பாதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். தாறுமாறாக ஓடிய அவரது கார் ஒரு டாக்சி மீது மோதியது.
இந்த விபத்தில் டாக்சி டிரைவர் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். மேலும் ஒரே குடும்பத்தை 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் வக்கீல் ஜான்வியை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, ஜான்வி குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் விபத்து நடந்த போது, அவர் போதையில் தான் இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக அவரது ரத்த மாதிரியை எடுத்து போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அனுமதிக்கப்பட்ட சராசரி அளவான, 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராம் அளவு இருக்க வேண்டிய ஆல்ஹகால், ஜான்வியின் ரத்தமாதிரியில் 120 மில்லி கிராமாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது. அனுமதிக்கப்பட்டதை விட அவர் 4 மடங்கு அதிக மதுபோதையில் இருந்துள்ளார்.
இதற்கிடையே பெண் வக்கீல் ஜான்வி கோர்ட்டு அனுமதியுடன் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். அவரது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து போலீசார் அவரை குர்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நடந்த விசாரணைக்கு பின்னர், வக்கீல் ஜான்வியை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating