கோவை சிறையில் அதிரடி சோதனை: 4 கைதிகளிடம் செல்போன்–கஞ்சா பறிமுதல்!!
கோவையின் இதய பகுதியான காந்திபுரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு குண்டு வெடிப்பு கைதிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
பாதுகாப்பு மிகுந்த மத்திய சிறையில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக சிறைத்துறை விஜிலென்ஸ் பிரிவுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் சிறைக்குள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அழகர்(வயது 30) என்ற கைதியிடமிருந்த கஞ்சாவும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
அழகரிடம் நடந்த விசாரணையில் சிறையில் உள்ள மேலும் பல கைதிகள் செல்போன் மற்றும் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.
சிறைத்துறை கூடுதல் சூப்பிரண்டு(பொ) செந்தில்குமார் உத்தரவின் பேரில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. தொடர் நடவடிக்கையாக சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கஞ்சா வழக்கில் விசாரணை கைதியாக உள்ள சொக்கநாதன் என்பவர் அடைக்கப்பட்டுள்ள 4–வது பிளாக்கில் நடந்த சோதனையில் அவர் மறைத்துவைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் 5–வது பிளாக்கில் நடத்திய சோதனையில் முகமதுபரூக்(27), உக்கடத்தை சேர்ந்த பஷீர்(32) ஆகியோரிடமிருந்த செல்போன்கள், சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன் எப்படி சிறைக்குள் வந்தது? என்று அதிகாரிகள் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் போது அவர்களை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் செல்போனை ஆசன வாயில் மறைத்து சிறைக்குள் கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் பேசி முடித்ததும் அந்த செல்போன்களை பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து கழிவறைக்குள் பதுக்கி வைத்து பயன்படுத்தியதும் தெரிய வந்தது. கைதிகளிடம் செல்போன்கள் சிக்கியதால் சிறையில் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Average Rating