2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!
ராஜஸ்தானில் வசிக்கும் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி, படிக்கவேண்டிய வயதில் விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பேருந்து உயரழுத்த மின்கம்பி விழுந்த கோர விபத்தில் 22 பேர் பலியாகினர். இதில் சோஹானி தேவியின் 15 வயது கணவன் சுக்கிராம் குஜ்ஜாரும் ஒருவர்.
2 வயதில் அச்சிறுமிக்கு சுக்கிராமை திருமணம் செய்துவைத்துள்ளனர். தற்போது சுக்கிராமுக்கு 15 வயது நடைபெறும் நிலையில், அவர் விபத்தில் பலியாகிவிட்டார். குழந்தைப் பருவ திருமணத்திற்குப் பின் பெற்றோர் வீட்டில் இருந்த அச்சிறுமி, தனது கணவனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமனார் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், மாமனார் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அச்சிறுமி பயத்தினால் அடிக்கடி அழுவதை பார்த்த குழந்தைகள் நல ஆர்வலரான ரவி சர்மா, ‘சோஹானி விவகாரம் மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இம்மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பெண் குழந்தைகள், பால்ய விவாகங்களில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்’ எனக்கூறியுள்ளார். இனியாவது அரசு இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Average Rating