சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!
ஒடிசா ரெயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ரெயில் நிலையத்தில் சில சிறுவர்-சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் களை பெண்கள் சிலர் கடத்திச் சென்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 5 பேரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வசந்தா, மஞ்சுளா, ஜெயம்மா, உபம்மா, வெங்கடம்மா, சியந்தம்மா, முனியம்மா, சுசீலா ஆகிய 8 பெண்களை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுவர்-சிறுமிகள் யார்? அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான பெண்கள் சிறுவர்-சிறுமிகளை மாற்றுத்திறனாளிகளாக நடிக்க வைத்து பிச்சை எடுக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating