தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!
வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 1½ வயதில் கோகுல், கோவர்தன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கோகுலுடன் சுரேஷ் வீட்டுக்கு வெளியேயும் கோவர்தனுடன் மைதிலி வீட்டுக்குள்ளேயும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
நள்ளிரவில் திடீரென அந்த பகுதியில் நாய்கள் சத்தமிட்டு குரைத்தன. திடுக்கிட்டு சுரேஷ் எழுந்தார். அருகில் படுத்திருந்த கோகுலை பார்த்தார். காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் அங்குமிங்கும் தேடினார். பின்னர் நாய் குரைத்த பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது கோகுலை ஒரு பெண் கடத்தி செல்வதையும் அந்த பெண்ணை நாய்கள் கடித்தபடி விரட்டுவதையும் பார்த்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டு அபயக்குரல் எழுப்பினார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அந்த பெண்ணை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர் அந்த பெண் ஆலங்காயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அந்த பெண்ணை கொண்டு சென்றனர்.
அங்கு சப்–இன்ஸ்பெக்டர் வளர்மதி விசாரணை நடத்தி வருகிறார். அந்த பெண் தெலுங்கில் பேசுகிறார். அவர் தனக்கு ஆம்பூர் என்றும் ஆந்திர மாநிலம் குப்பம் என்றும், தனது பெயர் அம்மு என்றும், அலமேலு என்றும் மாற்றி மாற்றி பேசுகிறார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating