எந்த நாட்டையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை – வட கொரியா
வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதற்கு எந்த நாட்டையும் தாக்கும் நோக்கம் இல்லை என்று அந்த நாட்டின் தென் கொரிய தூதர் சோயே மியோங்நாம் தெரிவித்து இருக்கிறார். வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தியது. நீண்ட தூரம் சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையையும் அது தயாரித்து சோதனை நடத்தியது. இந்த நீண்ட தூர ஏவுகணை அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடியது. வட கொரியா இப்படி ஏவுகணை சோதனை நடத்தியதற்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து உள்ளன.
ஜப்பான் இந்த பிரச்சினை குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிடம் புகார் கூறியது. வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. இதற்கு ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை விதிக்கும் எண்ணம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தென் கொரியாவுக்கான வட கொரிய தூதர் சோயே மியோங்நாம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது வட கொரியாவுக்கு பெருமையை தேடித்தந்தது. எந்த நாட்டையும் தாக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
ஒன்றை செய் அல்லது செய்யாதே என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்வதும் நியாயம் இல்லை. அதேபோல தான் அணு ஆயுதங்களை வைத்து கொள்வதற்கும், இன்னார்தான் வைத்துக்கொள்ள வேண்டும், இன்னார் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்வதும் நியாயம் இல்லை. நாங்கள் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துவோம். இவ்வாறு தூதர் கூறினார்.
இதற்கிடையில் இந்த ஏவுகணை சோதனையால் மிரண்டு போன ஜப்பான் அந்த நாட்டின் கப்பல்கள் ஜப்பான் துறைமுகத்துக்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது. இந்த தடையை கைவிட வேண்டும் என்று வட கொரியா கேட்டுக்கொண்டு உள்ளது. தடை தொடர்ந்து நீடிக்குமானால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா எச்சரித்து உள்ளது.