கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் அபயா. கன்னியாஸ்திரியான இவர் கடந்த 1992–ம் ஆண்டு மார்ச் 27–ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் புகார் கூறினர். இதுதொடர்பாக கோட்டயம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாஸ்திரி அபயாவின் உறவினர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 1993–ம் ஆண்டு மார்ச் 29–ந் தேதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு கைமாறியது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. மாநில போலீசாரிடம் கேட்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி அபயா அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்பு போன்றவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாக கூறினர். அங்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருந்தது. அதனை தேடும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார்கள் தாமஸ் எம்.கொட்டூர், ஜோஸ் புத்தரைக்கல் மற்றும் கன்னியாஸ்திரி ஸ்டெபி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சுமார் 16 ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் அவை எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கேரள ஐகோர்ட்டில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் அபயா வழக்கு தொடர்பான ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை என கூறியிருப்பதாக தெரிகிறது.
Average Rating