குமரியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 40½ பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது!!
குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு, நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இரவு நேரங்களில் அந்த பகுதி போலீசாரை ரோந்து பணியில் ஈடுபட செய்து நடவடிக்கை எடுத்து உள்ளார்.
நேற்று அருமனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திற்பரப்பு அருவி பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் புகுந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரது பெயர் செல்வி என்ற குள்ளம்மா (வயது 42). நாகர்கோவில் பறக்கை மடத்தெருவைச் சேர்ந்தவர். திற்பரப்பு அருவியில் குளிக்கும் பெண்கள், பஸ், வேன்களில் செல்லும் பெண்களிடம் கைவரிசை காட்டி உள்ளார்.
மொத்தம் 40½ பவுன் நகையை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட குள்ளம்மா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Average Rating