ஈரோடு பஸ் நிலையத்தில் பார்வையற்ற தம்பதிகளின் குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்!!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சந்தை பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு 1½ வயதில் யோகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கண் பார்வையற்ற தம்பதிகள் இருவரும் தங்களது குழந்தை யோகஸ்ரீயை வைத்து கொண்டு ஈரோடு பஸ் நிலைய பகுதியில் பிச்சை எடுத்து வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களது குழந்தையை வளர்த்து கொண்டு பஸ் நிலையத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தனர்.
இன்று ரவி, லட்சுமி ஆகியோர் பஸ் நிலையத்தில் குழந்தையை வைத்து கொண்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.
இதை சற்று தொலைவில் இருந்தப்படி சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கவனித்து கொண்டு இருந்தார். அந்த வாலிபர் லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார்.
திடீரென அந்த வாலிபர் லட்சுமியின் கையில் இருந்க குழந்தை யோகஸ்ரீயை பிடுங்கினார். பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு வாலிபர் தலைக்கெறிக்க தப்பி ஓடினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி, தனது குழந்தையை யாரோ பிடுங்கி கொண்டு ஓடுகிறார்கள் என்பதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ‘‘எனது குழந்தையை கடத்துகிறார்கள், தூக்கி கொண்டு ஓடுகிறார்கள்’’ என்று கூப்பாடு போட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு பஸ் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களில் சிலர், அந்த வாலிபர் குழந்தையை தூக்கி கொண்டு ஓடுவதை பார்த்தனர். உடனே பொது மக்கள், அந்த வாலிபரை விரட்டினர்.
இந்த சமயத்தில் ஜீப்பில் அந்த வழியாக போலீசார் ரோந்து வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பொதுமக்கள் குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் ஒரு வாலிபரை விரட்டுவதை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாரும், அந்த வாலிபரை விரட்டினர்.
பொதுமக்களும், போலீசாரும் ஒரே நேரத்தில் விரட்டியதால் அந்த வாலிபர் செய்வதறியாமல் திணறினார். பின்னர் குழந்தை யோக ஸ்ரீயை போட்டு விட்டு அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
பின்னர் குழந்தையை பொதுமக்களும், போலீசாரும் மீட்டு தாய் லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் கண்பார்வையற்ற தம்பதிகளின் குழந்தையை ஒரு வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பி ஓடிய வாலிபர் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். இருப்பினும் தப்பி ஓடிய அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Average Rating