கொடைக்கானலில் தங்கி மலைவாழ் இளைஞர்களை மூளை சலவை செய்த கோவை மாவோயிஸ்டுகள்!!
கொடைக்கானலில் மேல்மலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடத்தில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்து ஆயுதப்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து க்யூ பிரான்ச் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது நவீன் பிரசாத் என்பவர் சுட்டக் கொல்லப்பட்டார். அவனுடன் தங்கியிருந்த மேலும் சிலர் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து போலீசார் அடிக்கடி கொடைக்கானல் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ரூபேஷ், இவரது மனைவி ஷைனா, அனுப்ஸ், கடலூரைச் சேர்ந்த வீரமணி, மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற செந்தில் ஆகியோர் கோவையில் தங்கியிருந்த போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில் கண்ணன் மற்றும் வீரமணி கடந்த 2008–ம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் தங்கியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் வனப்பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, செம்பரான்குளம், கடுகுதடி புதூர் ஆகிய இடங்களில் இவர்கள் தங்கியிருந்து அங்குள்ள இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை தங்கள் இயக்கத்தில் சேருமாறு வற்புறுத்தி வந்தனர்.
இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து அங்கு மீண்டும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அதிரடிப்படை போலீசார் தெரிவிக்கும் போது கொடைக்கானல் வனப்பகுதியில் பங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கோவையில் கைதாகி கொடைக்கானலில் தங்கியிருந்த கண்ணன் மற்றும் வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்களது கூட்டாளிகள் இங்கு யாரும் இருக்கிறார்களா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். என்று தெரிவித்தனர்.
Average Rating