கடலூரில் வீட்டு ஜன்னலை பெயர்த்தெடுத்து ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை!!
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47) தொழிலாளி.
இவர் தனது வீட்டு பகுதியிலேயே புதிய வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணிக்காக, வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் எடுத்து தனது வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று இரவு, வழக்கம் போல் இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்க சென்றனர். நள்ளிரவில் அயர்ந்து தூங்கியபோது மர்மமனிதர்கள் சிலர், ‘ஸ்குரூ’வை கழற்றி அந்த வீட்டின் ஜன்னலை ‘அலேக்’ காக பெயர்த்தெடுத்தனர்.
பிறகு அதன் வழியாக அந்த வீட்டுக்குள் நைசாக புகுந்தனர். உள்ளே பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிசென்றனர். இன்று காலையில் கண்விழித்த இஸ்மாயில் குடும்பத்தினர், நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசில் இஸ்மாயில் புகார் செய்தார். உடனே போலீசார் தடயவியல் நிபுணருடன் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு பதிவாகியிருந்த ரேகைகள், தடயங்களை சேகரித்தனர். துப்பு துலக்குவதற்காக மோப்பநாயை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து, கைவரிசை காட்டி விட்டு தப்பிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating