எச்சில் துப்புபவர்களே உஷார் – துடைப்பத்தால் நீங்களே சுத்தம் செய்யவேண்டும்: அமல்படுத்த மகாராஷ்டிரா தீவிரம்!!
பளிங்கு போல் இருக்கும் சுவர் மற்றும் தரையை சமூக பொறுப்பில்லாத பான் பராக் வாசிகள் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இதற்கு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
அதன்படி அம்மாநிலத்தில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் துப்புபவர்கள், தாங்களே துடைப்பக்கட்டை மூலம், துப்பிய எச்சிலை துடைக்கவேண்டும். இதற்கு மறுத்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு தரையை சுத்தப்படுத்த உத்தரவிடப்படும். இது தவிர அபராதமும் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை அம்மாநில அரசுக்கு மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் அனுப்பியுள்ளார்.
இச்சட்டத்தை வரும் டிசம்பர் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் சாவந்த் தெரிவித்துள்ளார். அம்மாநில அமைச்சரவை நேற்று கூடியபோது, இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மந்திரி சாவந்த் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பொது இடங்களில் துப்புபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்கனவே அங்கு சட்டத்தில் இடம் உள்ள நிலையில், எச்சில் துப்புபவர்களுக்கு சமூக பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியை தர முடிவெடுத்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
Average Rating