கோவை கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!!
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் அங்கு வந்து நின்றது. காரில் இருந்து திருமண கோலத்தில் வாலிபரும், இளம்பெண்ணும் இறங்கினர். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் அந்த இளம் ஜோடி நாங்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு வழங்கக்கோரி புகார் மனு கொடுக்க வேண்டும் என்றனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் அந்த பெண் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
என் பெயர் ராதிகா(வயது 21). எனது சொந்த ஊர் ஒட்டன்சத்திரம். நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறேன். நானும் கோவை காந்திபுரத்தில் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் ரஞ்சித் (23) என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வருகிறோம். ரஞ்சித் கேரளாவை சேர்ந்தவர்.
எங்களின் காதல் விவகாரம் வெளியே தெரியவரவே இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் நாங்கள் திருமணம் செய்வதென்று முடிவில் உறுதியாக இருந்தோம். அதன்படி நான் தங்கியிருந்த ஆஸ்டலில் இருந்து வெளியேறினேன். பின்னர் நானும், ரஞ்சித்தும் காந்திபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ரஞ்சித் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவை பெற்றுக்கெண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து கிளம்பிச்சென்றது.
Average Rating