நைஜீரிய போதைப்பொருள் ஆசாமி டெல்லியில் கைது!!
டெல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியாவைச் சேர்ந்த 49 வயது ஸ்டான்லி மார்ட்டின்ஸ் உசோமா கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கடந்த 2013-ம் ஆண்டு வாடகைக்கு எடுத்த ஸ்டான்லி, அங்கிருந்து தெற்கு மற்றும் வடக்கு டெல்லியில் உள்ள பகுதிகளில் இளைஞர்களுக்கு கோகைன் என்ற போதைப்பொருளை வினியோகம் செய்து வந்துள்ளார். இவருடன் மேலும் சிலரும் இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் மாவட்டத்தில் ‘ஏ’ பிளாக் பார்க் பகுதியில் உள்ள பி.வி.ஆர். தியேட்டர் அருகே ஸ்டான்லி கோகைன் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரை மடக்கிப் பிடித்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 47 கிராம் உயர்தர கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு வர்த்தக விசாவில் மும்பைக்கு வந்த ஸ்டான்லி, மும்பை மற்றும் டெல்லியில் கோகைன் போதைப்பொருளுக்கு இளைஞர்களிடையே வரவேற்பு இருந்ததால் அந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டதும், விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
நைஜீரியாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் இந்தியா வந்தபின், விசா காலம் முடிந்தபிறகும் சொந்த நாட்டிற்கு திரும்பாமல் இங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating