மணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!!
திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் புலமாத்து கண்மாய் மற்றும் ஓடை பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்வது வழக்கம்.
கடந்த வாரம் நிலக்கோட்டை தாசில்தார் மோகன் தலைமையிலான தாலுகா அலுவலக ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த மகேஷின் டிராக்டர், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை தாசில்தார் மோகன் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.
மணல் கடத்திய குற்றத்திற்காக மகேஷ் தாலுகா அலுவலகத்தில் அபராதம் செலுத்தி உள்ளார். அப்போது டிராக்டரை விடுவிக்கும்படி தாசில்தார் மோகனிடம் மகேஷ் கெஞ்சி கேட்டார். ஆனால் டிராக்டரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 10 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று தாசில்தார் மோகன் தெரிவித்தார்.
இந்த பணத்தை கொடுக்க மனம் இல்லாத மகேஷ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ஜான் கிளமெண்ட் மகேஷ் வசம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.
இன்று காலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகனிடம் ரூ. 10 ஆயிரம் பணத்தை மகேஷ் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் மோகனை லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக கைது செய்தனர்.
Average Rating