சேலம் அருகே வாலிபர் கழுத்து நெரித்து கொலை!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி–சென்னை தேசிய நெடுஞ்சாலையான கிழக்குகாடு பகுதியில் சின்னாற்று ஓடை மேம்பாலம் அமைந்துள்ளது.
இந்த மேம்பாலத்தின் அடியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலை அறிந்ததும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வாலிபர் பிணமாக கிடக்கும் தகவலை அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் கூடினர்.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் வலது காலில் பழைய காய தழும்பு உள்ளது. இடது கையில் பச்சை குத்தி அது அழிக்கப்பட்டிருந்தது. தலையிலும் வலது காலிலும் காயங்கள் காணப்பட்டது.
அந்த வாலிபர் கருப்பு மற்றும் ஊதா கலர் கலந்த லுங்கியும் வெள்ளை கலரில் கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் வாழப்பாடி பகுதியில் உள்ள உறவினர் யாரேனும் வீட்டிற்கு வந்திருக்கலாமா? அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தினார்.
மேலும் சேலம் துப்பறியும் மோப்பநாய்கள் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
வாலிபரை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் ஆற்று பாலத்தின் அடியில் உடலை வீசி விட்டு சென்றார்களா? கொலை செய்யப்பட்ட நபர் உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா? இந்த கொலை சம்பவம் கள்ளக்காதல் தகராறில் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் தொடர்பாக நடந்ததா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக குற்றவாளிகளை பிடித்து விடலாம். மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் கண்டுபிடித்து விடலாம்.
அடையாளம் காண இயலவில்லை என்றால் கொலையாளிகள் யார்? என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் அவர்கள் தப்பித்து விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Average Rating