கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!!
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மகள் கீதா (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணத்துக்கு முன்பே கீதா, தனது உறவினரான மோகன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் கணவரை விட்டு பிரிந்தார்.
அதன்பிறகு கீதா, தனது காதலரான மோகனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்கள், கடந்த 1½ ஆண்டுகளாக கொடுங்கையூர் பகவதியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மாதத்தில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. கூலி தொழிலாளியான மோகனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கீதாவுக்கும், மோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கீதா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தனது காதல் கணவன் மோகன் கண் எதிரேயே தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கீதாவின் தந்தை சவுந்தர்ராஜ், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், மோகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கீதாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
Average Rating