ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குதல் மற்றும் அணுவாயுத நடவடிக்கைகளை தொடர்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப் புதிய தடைகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை மற்றும் அரசிற்கு சொந்தமான மூன்று வங்கிகள் என்பவற்றின் நிதி நடவடிக்கைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந் நடவடிக்கைகள் ஈரானின் அச்சுறுத்தல்களுக்கெதிரான பரந்த கொள்கையின் ஓர் அங்கமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இவ் விரோதக் கொள்கை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதென ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு ஈரான் பங்கம் விளைவிப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரான் அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அமைதிப் பேச்சுக்களை புறந்தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள ரைஸ் ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் பாலஸ்தீன பிராந்தியங்களிலுள்ள பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
13382 நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் சொத்துக்களை முடக்கவும் புரட்சிகர காவற்படையுடன் தமது மக்களோ அல்லது அமைப்போ வர்த்தகம் செய்வதை தடைசெய்யவும் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தடைகள் ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலுள்ள வர்த்தகங்கள், மூன்று அரச வங்கிகள் மற்றும் புரட்சிகர காவற்படைக்குச் சொந்தமான பல கம்பனிகள் என்பவற்றின் மீது விதிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புரட்சிகர காவற்படை தனது வர்த்தக நடவடிக்கைகளை கார் தொழிற்சாலைகள், பத்திரிகைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் உட்பட பல துறைகளில் விஸ்தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நடவடிக்கைகள் சர்வதேச நிதித் திட்டமிடல் முறைமையை ஈரானின் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு உதவுமென ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கையினை பிரிட்டிஷ் அரசாங்கம் வரவேற்றுள்ள அதேவேளை ஈரானின் வெளியுறவுத்துறை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.