செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!!
செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (37). நில புரோக்கர். கடந்த 15–ந் தேதி இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் சந்தோஷ்குமார், கார்த்திக், பன்னீர்வாக்கம் மனீஷ், பாடியநல்லூர் பாபு, செங்குன்றம் பாலசுப்பிரமணி, கும்மிடிப்பூண்டி கரிமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 6 பேர் இதில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சரவணன் கொலைக்கு மூளையாக பாலசுப்பிரமணி செயல்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
கடந்த 2010–ம் ஆண்டு பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்த கட்டாரி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சரவணனும், நானும் சம்பந்தப்பட்டு இருந்தோம்.
தற்போது சரவணன் தனியாக பிரிந்து தொழில் செய்து வந்தார். மேலும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி மோதலில் ஈடுபட்டு தனியாக ரவுடியாக வளர்ந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே, சரவணனை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.
சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அவரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொன்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் சந்தோஷ் குமாருக்கு பாலசுப்பிரமணி நண்பர் ஆவார். நண்பனின் கொலைத் திட்டத்துக்கு உதவி செய்ததால் சந்தோஷ்குமாரும் சிக்கிக் கொண்டார்.
Average Rating