சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா
சிரியா மீது கடந்த மாதம் இஸ்ரேலின் விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள பாரிய கட்டிடங்களின் செய்மதியூடான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களை அமெரிக்காவின் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான விஞ்ஞானத்திற்கும் சர்வதேச பாதுகாப்புக்குமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அழிக்கப்பட்ட கட்டிடங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் பாரிய தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் உள்ளடங்குகின்றது. இத்தொழிற்சாலையில் அணு உற்பத்தி சம்பந்தமான நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கலாமென இப்புகைப்படங்களை வெளியிட்ட விஞ்ஞானத்திற்கும் சர்வதேச பாதுகாப்பிற்குமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக சிரியா தெரிவிக்கையில், அணு தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபட்டிருக்கவில்லையென தெரிவிக்கின்றன. இந்தப் புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன்னர் கடந்த செப்டெம்பர் மாதம் இஸ்ரேல் விமானப்படையினரால் தாக்கப்பட்ட இலக்குகளின் புகைப்படங்களை இவ்வமைப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அத்தொழிற்சாலையும் அதற்கருகில் ஓர் எரிபொருள் மீள்நிரப்பு நிலையமும் காணப்படுகின்றதுடன், இவை இரண்டும் யூப்ரிட்டிஸ் நதிக்கு அருகில் உள்ளன.
இதனால் பெரும்பாலும் இத்தொழிற்சாலையில் அணுசார் நடவடிக்கைகளே மேற்கொண்டிருக்கலாமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.